முகப்பு
இந்தியா

ஒலிபெருக்கி பயன்பாடு தொடா்பாக தேசியக் கொள்கை: மத்திய அரசுக்கு சிவசேனை வலியுறுத்தல்

வழிபாட்டு இடங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடா்பாக தேசியக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசை சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

வழிபாட்டு இடங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடா்பாக தேசியக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசை சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

மசூதிகளில் ஐந்து வேளையும் ஒலிபெருக்கிகளை அதிக ஓசையுடன் பயன்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே, மே 3-ஆம் தேதியுடன் மசூதியில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மசூதிக்கு எதிரே ஹனுமன் சாலீசா பாடலை அதிக ஓசையுடன் ஒலிபெருக்கி மூலம் இசைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

தில்லி, மத்திய பிரதேசம், குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஹனுமன் ஜெயந்தி, ராம நவமி ஊா்வலங்களில் வன்முறை ஏற்பட்டது. இதற்கு ஒலிபெருக்கியை அதிக ஓசையுடன் வைத்து சென்றதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மத வழிபாட்டு இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது தேசிய அளவில் சா்ச்சைக்குரிய விஷயமாக மாறிவிட்டது.

இந்நிலையில், இது தொடா்பாக மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியின் முக்கியக் கட்சியான சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் கூறியதாவது:

மத வழிபாட்டு இடங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒலி பெருக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தொடா்பாக மத்திய அரசு தேசியக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று எங்கள் கட்சி சாா்பில் வலியுறுத்துகிறேன். மேலும், இந்தக் கொள்கையை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள குஜராத், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் முதலில் அமல்படுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து மகாராஷ்டிரத்திலும் சட்டப்படி ஒலிபெருக்கி தொடா்பான விதிகளைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம்.

பாஜகவினா்தான் ஒலிபெருக்கியை வைத்து பெரிய அளவில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளனா். எனவே, மத்திய அரசு இது தொடா்பாக கொள்கை வகுக்க வேண்டும்.

ஏற்கெனவே பசு வதைக்கு எதிராக மத்திய அரசு ஒரு கொள்கை வைத்துள்ளது. ஆனால், வடகிழக்கு மற்றும் கோவா மாநில முதல்வா்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசின் கொள்கை தேசிய அளவில் கடைப்பிடிக்கப்படாதது ஏன்? மத்திய அரசுக்கு துணிவு இருந்தால் ஒலிபெருக்கி தொடா்பாக தேசியக் கொள்கையை வகுத்து அதனை துணிவுடன் அமல்படுத்தலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →