எந்தெந்த மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம்?
கரோனா மூன்றாம் அலை ஓய்ந்திருந்த நேரத்தில் தற்போது மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கரோனா மூன்றாம் அலை ஓய்ந்திருந்த நேரத்தில் தற்போது மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள், மாவட்டங்களில் மீண்டும் முகக்கவசம், கரோனா விதிமுறைகள் என கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் நேற்று காணொலி வாயிலாக இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தொற்றின் தீவிரத்தால் மாநிலங்கள் பலவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம்?
Advertisement
கோவா: கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் பொது இடங்களில் அனைத்து கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்கவும் கோவா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரளம்: கேரளத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை எனில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி: கடந்த ஏப்ரல் 22 முதல் தில்லியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்: பேருந்து, ரயில்கள், விமானங்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால், கடைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய பஞ்சாப் அரசு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம்: கௌதம புத்தா நகர், காசியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்ஷாகர், பாக்பத், லக்னெள ஆகிய இடங்களில் முகக்கவசம் கட்டயமாக்கப்பட்டுள்ளது.
சண்டீகர்: பள்ளிகள், அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மூடிய அறைகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் ரூ. 500 அபராதம் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
தெலங்கானா: மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம்; மீறினால் ரூ. 1,000 அபராதம்.
தமிழகம்: மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம்; மீறினால் ரூ. 500 அபராதம்.
ஆந்திரம்: மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம்; மீறினால் ரூ. 100 அபராதம்.
கர்நாடகம்: முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மேற்குவங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் முகக்கவசம் கட்டாயம் என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளன.
கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.