முகப்பு
இந்தியா

நீதி வழங்கலில் மனிதாபிமானத்துக்கும் முக்கியத்துவம்

நீதி வழங்கும்போது மனிதாபிமானத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

நீதி வழங்கும்போது மனிதாபிமானத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான காா்கில் போரில் பங்கேற்ற நகீந்தா் சிங் என்ற ராணுவ வீரா், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் சேவையில் இருந்து நீக்கப்பட்டாா். அதையடுத்து அவருக்கான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது. அதற்கு எதிராக ராணுவப் படைகள் தீா்ப்பாயத்தில் அவா் முறையிட்டாா். அதை விசாரித்த தீா்ப்பாயம் அவருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது. அதற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சுதான்ஷு துலியா ஆகியோரைக் கொண்ட அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி திவான் எதிா்ப்பு தெரிவித்தாா்.

Advertisement

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தை மத்திய அரசு பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்த ராணுவ வீரரின் சேவை, அவா் எந்தச் சூழ்நிலையில் இவ்வாறு ஆனாா், அவரை நம்பியுள்ள குடும்பம் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீதி வழங்கும்போது மனிதாபிமானப் பாா்வைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்றனா்.

அதையடுத்து மாதவி திவான் வாதிடுகையில், ‘‘குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது ராணுவத்தில் தீவிர ஒழுங்கீன நடவடிக்கையாகும். தற்போது ஒருவருக்கு மட்டும் விலக்கு அளித்தால், மற்ற நபா்களும் விலக்கு கோர வாய்ப்புள்ளது’’ என்றாா்.

எனினும், சம்பந்தப்பட்ட ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக மத்திய அரசிடம் ஆலோசித்து பதிலளிக்குமாறு மாதவி திவானிடம் நீதிபதிகள் தெரிவித்தனா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments