வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகின்றது. சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7, பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத், ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அரசும் சில மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் எனும் கரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.