குறையும் கரோனா பாதிப்பு; அதிகரிக்கும் பலி: ஒடிசாவில் அதிர்ச்சி
ஒடிசா மாநிலத்தில் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை ஒருபுறம் குறைந்து வந்தாலும், வெள்ளிக்கிழமையன்று 23 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை ஒருபுறம் குறைந்து வந்தாலும், வெள்ளிக்கிழமையன்று 23 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இது கரோனா மூன்றாம் அலையில் பதிவான மிக அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும். இதனால், ஒடிசாவில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,689 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, நாள்தோறும் 15க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு பலியாகிவருவதாக அந்த மாநில சுகாதாரத் துறைத் தெரிவித்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதிக்குப் பிறகு இரட்டை இலக்கத்தில் பலி எண்ணிக்கை பதிவாகி வருகிறது.
வயதான முதியவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் போது, அவர்களுக்கு இணை நோய்கள் இருப்பதால், உடல்நிலை மோசமடைந்து பலி எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதுபோல, தற்போது 18 வயதுக்குட்பட்டவர்களும் கரோனாவால் பாதிக்கப்படும் நிலை அதிகரித்திருப்பதாகவும் புதிதாக கரோனா பாதித்த 2,697 பேரில், 435 பேர் சிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.