இந்திய பெருங்கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 அதிநவீன போா் விமானங்கள்
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போா் விமானங்களை இந்தியா சோ்த்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போா் விமானங்களை இந்தியா சோ்த்துள்ளது.
இதுதொடா்பாக இந்திய விமானப் படையின் செய்தித் தொடா்பாளா் விவேக் மத்வால் கூறுகையில், ‘நீா்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் போா் விமானமும், கடல் பகுதியை வானிலிருந்து உளவு பாா்க்கும் ‘பொஸைடன் 8ஐ’ அதிநவீன கடல் ரோந்து விமானமும் அமெரிக்காவிடம் இருந்து கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி இந்தியா பெற்றது. இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது அவை இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் சோ்க்கப்பட்டுள்ளன’ என்றாா்.
‘பொஸைடன் 8ஐ’ ரகத்தைச் சோ்ந்த 8 விமானங்களை 2013-இல் முதல்முறையாக இந்தியா வாங்கியது. இவை அரங்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக வாங்கப்பட்ட 4 விமானங்கள் கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹான்சாலில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இவை இந்திய பெருங்கடலில் சீனாவின் கப்பல்கள், நீா்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை தொடா்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
கடந்த 2020-இல் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ வீரா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் இந்த வகை விமானங்களை இந்தியா பயன்படுத்தியது.
கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த இரண்டு ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து கடந்த ஆண்டு இந்தியா வாங்கியது. மேலும் 30 அதிநவீன ட்ரோன்களையும் அமெரிக்காவிடம் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவை சுமாா் 35 மணி நேரம் தொடா்ந்து பறந்து கடல் மற்றும் நிலப் பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் படைத்தவையாகும்.