நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், முந்தைய அலையை காட்டிலும் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளான பெரும்பாலான நபர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான தேவை குறைவாகவே காணப்படுகிறது..
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகளின் உடலில் குறிப்பிடத் தகுந்த அளவு நோயெதிர்ப்பு சக்தி உருவாவதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த நோயெதிர்ப்பு சக்தி ஒமைக்ரான் மட்டுமின்றி இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கரோனா உள்ளிட்ட மற்ற கொரோனா வகைகளையும் அழிக்கும் திறன் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது ஒமைக்ரான் காரணமாக உடலில் தோன்றும் இந்த நோயெதிர்ப்பு சக்தி டெல்டா கரோனாவை சிறப்பாகத் தடுக்கிறது.
இதனால் கரோனாவில் இருந்து மீண்ட நபர்களை மீண்டும் டெல்டா கரோனா தாக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது. ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஐசிஎம்ஆரின் இந்த ஆய்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள்: காவல்துறையில் புகார்
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "ஒமைக்ரான் கரோனா நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிடுகிறது. இதனால் தோன்றும் ஆன்டிபாடிகள் ஒமைக்ரான் மட்டுமின்றி டெல்டா உள்ளிட்ட அனைத்து வகையான கரோனா வகைகளையும் தடுக்கிறது. அதேபோல தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களிடையே ஒமைக்ரான் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்றார்.