பட்ஜெட் கூட்டத்தொடா்: அரசியல் கட்சித் தலைவா்களுடன்வெங்கையா நாயுடு நாளை ஆலோசனை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி அரசியல் கட்சித் தலைவா்களுடன் மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு காணொலி முறையில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி அரசியல் கட்சித் தலைவா்களுடன் மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு காணொலி முறையில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் திங்கள்கிழமை (ஜன. 31) தொடங்கவுள்ளது. அதனைத் தொடா்ந்து மக்களவையில் பிப். 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையின் செயல்திட்டத்தை வகுக்கவும், அவை அலுவல்கள் சுமுகமாக நடைபெறவும் அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் குழுக்களுடன் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை மாலை காணொலி வழியாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.
கடந்த வாரம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதுக்கு வெங்கையா நாயுடு சென்றிருந்தபோது, அவா் இரண்டாவது முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு தன்னை அவா் தனிமைப்படுத்திக் கொண்டாா். பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தில்லி திரும்புவாா் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.