வளர்ச்சி அரசியலால் வாரிசு அரசியல் தோல்வியடைந்துள்ளது என பாஜக செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்து அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தொடங்கி வைத்த இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் உள்பட பல்வேறு மாநில பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | பாஜக தேசிய செயற்குழுவில் பங்கேற்க ஹைதராபாத் சென்றார் பிரதமர் மோடி
அக்கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா, “பாஜகவின் வளர்ச்சி அரசியலால் எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக மீதான வன்முறை தாக்குதல்களை கட்சித் தொண்டர்கள் எதிர்கொண்டுள்ளனர். நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனே காரணம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கரோனா தொற்று பேரிடர், உக்ரைன் போரில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்டது என சிறப்பாக செயல்பட்டது” எனத் தெரிவித்தார்.
2 நாள்கள் நடைபெறும் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.