ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால், அந்த நிறுவனத்துக்கு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விமானங்களின் பாதுகாப்புத் தன்மை மற்றும் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் கியூ400 ரக விமானம், குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்தில் இருந்து செவ்வாய்க் கிழமை மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. 23,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த விமானம், மும்பை விமான நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை, தில்லியில் இருந்து துபை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது. காராச்சியில் பயணிகள் தங்கவைக்கப்பட்டு பிறகு துபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் கடந்த 17 நாள்களில் 7 முறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.