அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி.யை தில்லி காவல் துறையினர் முடியைப் பிடித்து இழுத்துச் சென்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
விஜய் சவுக் பகுதியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல் துறைக்கும் எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி. காவல் துறை காரில் இருந்தவாறு செய்தியாளர்களிடம் பேச முயன்றார். அப்போது காவல் துறையினர் அவரது தலை முடியைப் பிடித்து வெளியே இழுத்து கதவின் வழியாக அவரை உள்ளே தள்ளினர். அவர் தொடர்ந்து பேச முயன்றபோது, காவல் துறையினர் தடுத்து அவரை காரில் வைத்து பூட்டினர்.
இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளார். அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தியுடன் 50 எம்.பி.க்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.