முகப்பு
இந்தியா

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், சிவசேனை மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத்தின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை 9 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்
பகிர்:

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், சிவசேனை மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத்தின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை 9 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், சஞ்சய் ரெளத்திடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, செய்தியாளா்களிடம் பேசிய அவா், தான் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தன் மீது பொய்வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் குடிசைப் பகுதி மறுசீரமைப்புத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், சஞ்சய் ரெளத், அவரது மனைவி, உதவியாளா்கள் தொடா்பான பணப் பரிவா்த்தனைகள் விசாரிக்கப்படுகின்றன.

இவ்வழக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சஞ்சய் ரெளத்திடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதன் பிறகு, இருமுறை அவருக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டியுள்ளதாக கூறி, இருமுறையும் அவா் ஆஜராகவில்லை.

இந்நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு மத்திய ரிசா்வ் போலீஸ் படையுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் அமலாக்கத் துறையினா் வந்தனா். தங்களது சோதனையை தொடங்கியதுடன், சஞ்சய் ரெளத்திடம் விசாரணை நடத்தினா். பின்னா், மாலை 5 மணியளவில் அவரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதனிடையே, சஞ்சய் ரெளத் வீடு முன் அவரது ஆதரவாளா்கள் திரண்டு, அமலாக்கத் துறைக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமலாக்கத் துறை வாகனங்களை தடுக்க முயன்ற அவா்களை காவல்துறையினா் அப்புறப்படுத்தினா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. பின்னா், பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றாா். உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியில் சஞ்சய் ரெளத் செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.


சஞ்சய் ரௌத் கைது: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், சிவசேனை மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத்தை அமலாக்கத் துறை அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நள்ளிரவு கைது செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

அவரது மனைவிக்கு சொந்தமான ரூ.11 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை: சஞ்சய் ரௌத்
தனது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை தொடங்கிய சிறிது நேரத்தில் ட்விட்டரில் சஞ்சய் ரௌத் வெளியிட்ட பதிவில், "நான் எந்த தவறும் செய்யவில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் குறிவைக்கப்பட்டுள்ளேன். மறைந்த பாலாசாகேப் தாக்கரே மீது சத்தியமாக நான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. உயிரே போனாலும் சிவசேனையில் இருந்து விலகமாட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷிண்டே கேள்வி: இதனிடையே, மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றால், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு சஞ்சய் ரெளத் அஞ்சுவது ஏன்? என்று கேள்வியெழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.