இது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம்: ராபின் உத்தப்பா
எதிர்வரும் ஐபிஎல் தொடர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐபிஎல் தொடர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஐபிஎல் தொடர்பான செய்திகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, வழக்கம்போல இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்ற செய்திகளும் வலம் வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் ஐபிஎல் தொடரே சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் நிற ஜெர்சியில் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். இந்த ஆண்டு அவரை ஒரு வீரராக மட்டுமின்றி, அணியின் ஆலோசகராகவும் நான் பார்க்கிறேன். அவர் 7-வது இடத்தில் களமிறங்காமல், 8-வது இடத்தில் களமிறங்குவார் என நினைக்கிறேன். ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை நோக்கி பயணிப்பதால் அவர் பின் வரிசையிலேயே களமிறங்குவார் என்றார்.
ஐபிஎல் தொடர் அறிமுகமானது முதல் இதுவரையிலான அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் மட்டுமே விளையாடியுள்ளனர்.
44 வயதாகும் தோனி இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5439 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தோனி 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.