மும்பையில் கரோனா அலையா? புதிய கட்டுப்பாடுகள் வருமா?
நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதையடுத்து, நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கள்கிழமை 1,036 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று, வாராந்திர கரோனா பாதிப்பு சராசரி ஆயிரத்தைக் கடந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, 7 நாள் கரோனா பாதிப்பு சராசரி முதல் முறையாக அதிகரித்துள்ளது. இதற்கு ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவி வருவதே காரணம் என்றும் கூறப்படுகிறது. அதுபோல, பிப்ரவரி 13ஆம் தேதிக்குப் பிறகு, கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதமானது 4.25% ஆகவும் உயர்ந்துள்ளது.
ஒருபக்கம் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் அளவு குறைவாகவே இருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
மாநிலத்தில் தற்போது கரோனா உறுதி செய்யப்படுவோரில் 1 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, கரோனா தொற்றின் தீவிரம் குறைவாகவே இருப்பதால் அச்சப்பட ஒன்றும் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
மும்பையில் மட்டும் நேற்று 676 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் இது 60 - 70 சதவீதமாக உள்ளது. மாநில அளவில் கரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரிக்கையில், மும்பையிலும் பாதிப்பு கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
மாநில அளவில் கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த பாதிப்பில் மும்பையின் சராசரி 67.28 சதவீதமாக உள்ளது. எனவே, கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளில் பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.