பெங்களூரு: பண அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யும் முறைக்கான காலஅவகாசத்தை மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது ரிசர்வ் வங்கி.
முன்னதாக, ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவிருந்த டோக்கனைசேஷன் முறை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 மாத காலம் அளித்து, செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.
ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கும் போது பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போதும், வாடிக்கையாளரின் பண அட்டை விவரங்கள் சேமித்து வைக்கப்படும். இதன் மூலம் பண அட்டையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அடிப்படையில், டோக்கனைசேஷன் முறையை ஆர்பிஐ கொண்டு வந்தது.
இதையும் படிக்க.. கிரெடிட், டெபிட் அட்டைகளை டோக்கனைசேஷன் செய்யாவிடில் என்னவாகும்?
இந்த டோக்கனைசேஷன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், வியாபாரிகளும், வணிகர்களும், பயனார்களின் பண அட்டை விவரங்களை சேமித்து வைக்க முடியாது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பண அட்டை நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவிருந்த நிலையில், இந்த புதிய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்த சிறிய வணிகர்களுக்கு சிரமம் ஏற்பட்டிருப்பதால், இதற்கான கால அவகாசம் செப்டம்பர் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.