உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்றது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்டில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் தற்போது, உத்தரப் பிரதேசத்திலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவை என்ற நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 273 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சமாஜவாதி கூட்டணி 121 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி நிலையைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத் தவுகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜக 41.3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. சமாஜவாதி 32.1 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 2.33 சதவிகித வாக்குகளையும், ராஷ்டீரிய லோக் தளம் 2.9 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது.