புது தில்லி: உத்தரபிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அந்த மாநிலத்தில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தாலும் கூட, உத்தர பிரதேசத்தில் போட்டியிட்ட 399 காங்கிரஸ் வேட்பாளர்களில் 387 பேருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லையாம்.
உத்தர பிரதேசத்தின் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்த கட்சிக்கு கிடைத்த வாக்கு விகிதம் 2.4 சதவீதம் மட்டுமே. இது, ராஷ்ட்ரிய லோக் தளக் கட்சி பெற்ற வாக்குகளை விடவும் மிகவும் குறைவு. வெறும் 33 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய லோக் தளம் 2.9 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. மகளிர்நாள் எல்லாம் இருக்கட்டும்.. உங்களை நீங்க கொண்டாடுங்க!
காங்கிரஸ் மட்டுமல்ல, 403 தொகுதிகளிலும் போட்டியிட்ட பகுஜன் சமாஜவாதி கட்சி வேட்பாளர்களில் 290 பேருக்கு டெபாசிட் கிடைக்கவில்லை.
அவ்வளவு ஏன்? உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களில் 3 பேருக்கு டெபாசிட் கிடைக்கவில்லை. தங்களது கூட்டணியில் இடம்பெற்றிருந்த அப்னா தல் கட்சிக்கு, வெற்றி பெற வாய்ப்பு குறைவாக இருக்கும் தொகுதிகளையே பாஜக ஒதுக்கியும், ஒரு தொகுதியிலும் டெபாசிட் இழக்கவில்லை.
தேர்தலில் சமாஜ்வாதி கட்சியினர் 6 பேருக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை. அதாவது, ஒரு மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைக் கூட பெறாதவர்களுக்கு தேர்தல் விதிப்படி, அவர்கள் செலுத்திய வைப்புத்தொகை திரும்ப வழங்கப்படாது.
இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், உத்தர பிரதேசத்தில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 4,442 பேரில் 3,522 பேர் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் தங்களது வைப்புத் தொகையைப் பெறவில்லை என்பதுதான்.