பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 18 வயது இந்து பெண்ணை சுட்டுக் கொன்ற வழக்கில் சந்தேக நபரை பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலையாளி மற்றும் அவனது கூட்டாளிகள் இருவர் இந்து பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளனர். மறுத்ததால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கொல்லப்பட்ட இந்து பெண் பூஜா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தானில் நடந்த தனிச் சம்பவம் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ மற்றும் இந்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். மேலும் திருமணம் மற்றும் மதமாற்றம் போன்ற பிரச்னைகளை நீண்டகாலமாக எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பாகிஸ்தானில் இந்து சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 1.60 சதவீதமாகவும், சிந்து மாகாணத்தில் 6.51 சதவீதமாகவும் உள்ளதாக புள்ளியியல் விவரம் தெரிவித்துள்ளது.