கோவா பேரவைத் தலைவராக ரமேஷ் தவாத்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைத் தேர்தலில், 20 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் நேற்று(திங்கள்கிழமை) பதவியேற்றார். முதல்வா் பிரமோத் சாவந்த் மற்றும் அமைச்சா்களுக்கு ஆளுநர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பனாஜி அருகேயுள்ள சியாமா பிரசாத் முகா்ஜி மைதானத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், உத்தரகண்ட் மாநில முதல்வர்கள் மற்றும் பாஜகவினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் பாஜகவின் ரமேஷ் தவாத்கர் கோவா பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ அலெக்சியோ ஸ்க்யூரா 15 வாக்குகள் பெற்ற நிலையில், 24 வாக்குகள் பெற்ற ரமேஷ் தவாத்கர் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவாவில் பெரும்பான்மைக்குத் தேவையான 21 இடங்களில் பாஜக தனித்து 20 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால் பிரமோத் சாவந்த் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க | கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றாா்: பிரதமா் மோடி பங்கேற்பு