லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி திமுகவை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இந்தியாவிற்கான யோசனைகள் எனும் தலைப்பில் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளை மதிப்பதாகவும் பண பலம் மற்றும் அதிகார பலத்தால் பாஜக ஊடகங்களை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிக்க | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. மக்களின் கருத்தைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி செயல்படும். இது ஒரு சித்தாந்தப் போர். திமுகவை தமிழ் அரசியல் அமைப்பாக மதிக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் தேசிய அளவில் சித்தாந்தம் உள்ளது. தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராடுவது காங்கிரஸால் மட்டுமே முடியும், சித்தாந்தம் இல்லாததால் மாநிலக் கட்சிகளால் இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஆசிரம பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்: அஜித் பவார்
லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் தேர்தல் கூட்டணிகள் குறித்து ராகுல்காந்தி பேசியுள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது.