இந்து மதத்திற்கு எதிரானவரா அரவிந்த் கேஜரிவால்? பதாகைகளால் பரபரப்பு!
குஜராத்தின் முக்கிய நகரங்களில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் முக்கிய நகரங்களில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு குஜராத் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் பிரசாரத்திற்காக ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் குஜராத் வருகை புரிந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல இடங்களிலும் இது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சில பதாகைகளில் தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அந்தப் பதாகைகளில் அவரது புகைப்படத்திற்கு அருகில் ”நான் இந்து மதத்தை முட்டாள் தனமாக கருதுகிறேன்” “இந்துகளுக்கு எதிரான கேஜரிவாலே திரும்பிப் போ” போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற பதாகைகள் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், ராஜ்காட், சூரத் மற்றும் வதோதரா ஆகிய நகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஒருபோதும் பின்வாங்குவதில்லை, இறுதி வரை போராட்டம்: சசி தரூர்
அண்மையில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த தில்லி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் ஒரு மத மாற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மாறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்தும், பாஜக தலைவர்கள் பலரும் ஆம் ஆத்மியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஆம் ஆத்மி இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு முக்கியப் போட்டியாளராக அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.