முகப்பு
இந்தியா

சிஎன்ஜி, பிஎன்ஜி விலைகள் இன்று முதல் உயர்வு

சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு சமையலுக்காக விநியோகிக்கப்படும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) ஆகியவற்றுக்கான விலையை ஐஜிஎல் அதிகரித்திருப்பது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
சிஎன்ஜி, பிஎன்ஜி விலைகள் இன்று முதல் உயர்வு
பகிர்:


புது தில்லி: மின்சார உற்பத்தி, வாகனங்களுக்கான சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் வீடுகளுக்கு சமையலுக்காக விநியோகிக்கப்படும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) ஆகியவற்றுக்கான விலையை ஐஜிஎல் அதிகரித்திருப்பது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இயற்கை எரிவாயுவின் விலை இதுவரை இல்லாத அளவில் அக்டோபர் 1ஆம் தேதி 40 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது சிஎன்ஜி, பிஎன்ஜி விலை உயர்வுகளும் இன்று அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது. இதன் மூலம், ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.78.61 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில், நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஸியாபாத்தில் இது ரூ.81.17 ஆகவும், குருகிராமில் ரூ.86.94 ஆகவும் உள்ளது.

இதுபோல, வீடுகளுக்கு சமையலுக்காக விநியோகிக்கப்படும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு விலையும் ஒரு கன மீட்டருக்கு ரூ.53.59 ஆக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

40% உயா்ந்த இயற்கை எரிவாயு விலை 

முன்னதாக, மின்சார உற்பத்தி, வாகனங்களுக்கான சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் வீடுகளுக்கு சமையலுக்காக விநியோகிக்கப்படும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயற்கை எரிவாயுவின் விலை இதுவரை இல்லாத அளவில் அக்டோபர் 1ஆம் தேதி 40 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது.

சா்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த விலை உயா்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்றாவது முறையாக இதன் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு காரணமாக, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயுக்களின் விலையும் தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. இவற்றின் விலை கடந்த ஓராண்டில் 70 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை, அமெரிக்கா, கனடா, ரஷியா போன்ற மிகை உற்பத்தி நாடுகளின் விலை நிலவரத்தின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏப்ரல் 1 மற்றும் அக்டோபா் 1ஆகிய தேதிகளில் மத்திய அரசு மாற்றியமைத்து வருகிறது.

அதன்படி, கடந்த மாா்ச் மாதம் வரை இயற்கை எரிவாயுவின் விலை உற்பத்தி செலவைக் காட்டிலும் குறைவாக இருந்துவந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச விலை உயா்வின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவின் விலை அதன் பிறகு பன்மடங்காக உயா்ந்து வருகிறது.

இவ்வாறு, மிகை உற்பத்தி நாடுகளின் விலையின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை நிா்ணயம் செய்வது அதிக ஏற்ற - இறக்கங்களைக் கொண்டிருப்பதால், நுகா்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், நியாயமான விலை நடைமுறையை வகுத்து பரிந்துரை செய்ய மத்திய திட்டக் குழு முன்னாள் உறுப்பினா் கிரித் எஸ்.பரீக் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை செப்டம்பா் இறுதியில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.