கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்து மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் உள்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான மந்திரவாதி முகமது சஃபி வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கொச்சி துணை ஆணையர் எஸ். சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. தலைமை விசாரணை அதிகாரியாக உதவி காவல் கண்காணிப்பாளர் அனுஜ் பலிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதியை ஓரிரு நாள்களில் நீதிமன்றத்தில் பெறவுள்ளனர்.
வழக்கின் பின்னணி
கேரளத்தில் சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பத்தினம்திட்டா மாவட்டம் கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.
செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது சஃபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த மசாஜ் சிகிச்சையாளரான பகவல் சிங் மற்றும் அவருடைய மனைவி லைலா இருவரும், அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.
காவல்துறை விசாரணையில் நரபலி கொடுத்தவர்கள் மனித மாமிசம் சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.