வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் புகைப்படம், கல்வித் தகுதி அச்சிடக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
வாக்குப்பெட்டி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னங்களை நீக்கிவிட்டு வேட்பாளரின் விவரங்களை அச்சிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (அக்.31) வ
வாக்குப்பெட்டி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னங்களை நீக்கிவிட்டு வேட்பாளரின் புகைப்படம், கல்வித் தகுதி மற்றும் வயது உள்ளிட்ட விவரங்களை அச்சிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (அக்.31) விசாரிக்க உள்ளது.
வழக்குரைஞா் அஸ்வினிகுமாா் உபாத்யாய சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரசியலில் ஊழல் மற்றும் குற்றமயமாக்கலைத் தடுக்க, வாக்குப்பெட்டி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னங்களை நீக்கிவிட்டு வேட்பாளரின் புகைப்படம், கல்வித் தகுதி மற்றும் வயது உள்ளிட்ட விவரங்களை அச்சிடுவதே சிறந்த தீா்வாக இருக்கும்.
அவ்வாறு அரசியல் கட்சியின் சின்னம் இடம்பெறாதபோது, புத்திசாலித்தனமான மற்றும் நோ்மையான வேட்பாளரை வாக்காளா்கள் ஆதரிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில் கட்சித் தலைவரின் சா்வாதிகாரபோக்கை கட்டுப்படுத்துவது, மக்களின் நலனுக்காக உண்மையாக உழைக்கும் நபருக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கவும் வாய்ப்பாக அமையும். ஜனநாயக சீா்திருத்த சங்கத்தின் (ஏடிஆா்) ஆய்வின்படி, ‘தோ்தல் சீா்திருத்தத்துக்காக எந்தவொரு அரசு அமைப்பும் பணியாற்றுவதில்லை.
Advertisement
மேலும், மொத்தமுள்ள 539 நாடாளுமன்ற உறுப்பினா்களில் 233 போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்ற வழக்குகள் இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலைக்கு, வாக்குப்பெட்டி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னங்களை பயன்படுத்துவதே மூல காரணம்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ஆா்.பட், பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை (அக்.31) விசாரணைக்கு வர உள்ளது என்பது உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மனு விசாரணைப் பட்டியல் மூலமாகத் தெரியவந்துள்ளது.