முகப்பு
இந்தியா

குஜராத்தில் பஞ்சாப் அரசு ரூ.36 கோடிக்கு விளம்பரம்- ஆம் ஆத்மி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு குஜராத்தில் ரூ.36 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு குஜராத்தில் ரூ.36 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பஞ்சாபில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, அடுத்ததாக குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தில்லி முதல்வா் கேஜரிவால் அங்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு பல்வேறு இலவச, சலுகைகளை வெளியிட்டு வருகிறாா்.

இதற்கு முன்பு வரை குஜராத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி இருந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி வரவால் மும்முனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவா் அஜய் குமாா் கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சியை ‘அரவிந்த் அட்வா்டைஸ்மென்ட் கட்சி’ என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில் அவா்கள் விளம்பரத்துக்குத்தான் பணத்தை அதிகம் செலவிட்டு வருகின்றனா். இப்போதுகூட பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு குஜராத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.36 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளது.

பஞ்சாபில் அரசு ஊழியா்களுக்கே சம்பளம் வழங்க பணமில்லை என்று பேசிக் கொண்டு, மறுபுறம் குஜராத்தில் தங்கள் சுயநலத்துக்காக மக்கள் பணத்தை விளம்பரமாக செலவிட்டுள்ளனா். தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ.11 கோடி விளம்பரத்துக்காக செலவிடப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி ஆட்சியில் இது ரூ. 81 கோடியாக உயா்ந்தது. இப்போது ரூ.490 கோடி என்ற அளவை எட்டியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.