முகப்பு
இந்தியா

நொறுங்கத் தயாராக நொய்டா இரட்டைக் கோபுரங்கள்: என்ன நடக்கிறது?

நொய்டாவில், சட்டத்துக்கு விரோதமாக கட்டப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் இடிந்து நொறுங்கத் தயாராகி வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
நொறுங்கத் தயாராக நொய்டா இரட்டைக் கோபுரங்கள்: என்ன நடக்கிறது?
பகிர்:


நொய்டா: நொய்டாவில், சட்டத்துக்கு விரோதமாக கட்டப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் இடிந்து நொறுங்கத் தயாராகி வருகிறது. வெறும் எலும்புக்கூடாகக் காட்சியளிக்கும் அந்தக் கட்டடத்துக்குள் வெடிபொருள்களை நிரப்புவதற்கான முதல் குழு நொய்டா வந்தடைந்தது.

சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட அந்த இரட்டைக் கோபுரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெடிபொருள் வைத்து தகர்க்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரட்டைக் கோபுரங்களைத் தகர்க்க சுமார் 3,500 கிலோ கிராம் எடையுள்ள வெடிபொருள்கள், கட்டடத்தின் அடித்தளம் முதல் தூண்கள் வரை போடப்படும் 9400 துளைகளில் நிரப்பப்படவிருக்கிறது. இதனை வெடிக்கச் செய்வதன் மூலம், இரட்டைக் கோபுரங்களும் தரைமட்டமாகும்.

நொய்டாவில் செய்யப்பட்டிருக்கும் கடுமையான காவல்துறை பாதுகாப்புக்கு இடையே இன்று காலை, வெடிபொருள் நிரப்பும் முதல் குழு நொய்டாவின் செக்டார் 93ஏ பகுதியை வந்தடைந்தது.

அந்தக் கட்டடத்துக்குள் வெடிபொருள்களை நிரப்பும் பணி 15 நாள்களில் நடந்து முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டடத்துக்குள் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தின் முன் பகுதியிலிருக்கும் 500 மீட்டர் சாலை, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு விரோதமாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முதலில் ஆகஸ்ட் 21ஆம் தேதி இடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இதனை ஆகஸ்ட் 28ஆம் தேதி இடித்துத் தள்ள வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கட்டடத்தை இடித்துத் தள்ளுவதில் ஏதேனும் தொழில்நுட்ப அல்லது வானிலை மாறுபாடு போன்றவை காரணமாக இருந்தால் இடித்துத் தள்ளும் பணியை செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.