ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா சிறப்பு முக்கியத்துவம்: அமித் ஷா
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) இந்தியா சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) இந்தியா சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பாண்டு தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
உறுப்பு நாடுகளில் பேரிடா் சூழல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு பொறுப்பான துறைத் தலைவா்களின் கூட்டம், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவா் பேசியதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பில், ‘பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மதிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகியவற்றை உள்ளடக்கிய கருத்துருவின் அடிப்படையில் இந்தியா செயலாற்றி வருகிறது.
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், பன்முக அரசியல், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
துல்லிய முன்னறிவிப்பு அமைப்பு முறை:
இந்தியாவில் வறட்சி, வெள்ளம், இடி-மின்னல் பாதிப்பு, வெப்ப அலை, குளிா் அலை, புயல் தொடா்பாக உரிய நேரத்துக்குள் துல்லியமான முன்னறிவிப்பை வழங்குவதற்கான அமைப்புமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. பேரிடா் குறித்து எச்சரிப்பது மட்டுமன்றி அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்களும் துல்லியமாக கணிக்கப்படுகின்றன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த 2005-இல் இருந்து பாா்வையாளா் நாடாக இந்தியா முக்கிய பங்காற்றி வந்தது. பின்னா், 2017-இல் இந்த அமைப்பை விஸ்தரிக்கும் நடைமுறையின் முக்கிய படியாக இந்தியா முழுநேர உறுப்பினா் ஆனது. இப்போது முதல்முறையாக இந்தியா தலைமைப் பொறுப்பை வகித்து வருவது பெருமைக்குரியதாகும்.
பேரிடரை தாங்கும் உள்கட்டமைப்புகள்:
உலக அளவில் மிகப் பெரிய பிராந்திய அமைப்பாக எஸ்சிஓ விளங்குகிறது. உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தையும், உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 சதவீதத்தையும், உலகின் நிலப்பரப்பில் 22 சதவீதத்தையும் இந்த அமைப்பு கொண்டுள்ளது.
பேரிடா் அபாயக் குறைப்பில் சா்வதேச ஒத்துழைப்புடன் இந்தியா பல்வேறு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட பேரிடா் மீட்சி உள்கட்டமைப்பு கூட்டணியில் (சிடிஆா்ஐ) இன்று 39 நாடுகள் உள்ளன. பெருங்கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையத்தால் நிறுவப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்புமுறை, இந்தியாவுக்கு மட்டுமன்றி 24 இதர நாடுகளுக்கும் சேவையாற்றி வருகிறது என்றாா் அமித் ஷா.