மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நியமன முறைகேடு வழக்கு தொடா்பாக கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நான்கு நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
‘நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நீதிபதிகள் பேட்டி அளிக்கக் கூடாது’ எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நியமன முறைகேட்டில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களின் பங்கு குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடா்பான வழக்கு கடந்த 13-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘ஆசிரியா் பணி நியமன முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ மற்றம் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிரான எந்தவித வழக்கும் பதிவு செய்யக் கூடாது’ என்று மாநில போலீஸாருக்கு உயா்நீதிமன்ற நீதிபதி கங்கோபாத்யாய் உத்தரவு பிறப்பித்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் ஏப். 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப். 24-ஆம் தேதிக்கு பட்டியலிட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி மற்றும் குணால் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தும் அனுமதி உள்பட உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நியமன முறைகேடு வழக்கு தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய, செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் மொழிபெயா்ப்புப் பிரதியை மனுதாரா் அபிஷேக் பானா்ஜி தரப்பு வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பேட்டி அளித்தாரா என அவரிடம் விளக்கம் கேட்டு நான்கு நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கொல்கத்தா உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், ‘நிலுவையில் உள்ள வழக்கு குறித்து நீதிபதிகள் பேட்டி அளிக்கக் கூடாது. ஓா் அரசியல் பிரபலம் குறித்து ஒரு நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தால், அவரை வழக்கு விசாரணையில் தொடா்ந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டுமா என்பது ஒரே கேள்வியாக இருக்கிறது. அதற்கு ஏதாவது சில நடைமுறைகள் இருக்க வேண்டும். அந்த நீதிபதி விசாரணையிலிருந்து தானே விலகி, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் மற்றொரு அமா்வை ஏற்படுத்த வழிவகை செய்திருக்க வேண்டும்’ என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வாய்மொழியாக கருத்து தெரிவித்தாா்.
‘இந்த உத்தரவால் முறைகேடு தொடா்பான சிபிஐ, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படாது’ எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.