மின் விசிறியில் தற்கொலை தடுப்புக் கருவி: கோடா பயிற்சி மையங்களுக்கு உத்தரவு
கோடாவில் உள்ள மாணவர்கள் விடுதியில் இருக்கும் மின் விசிறிகளில் தற்கொலை தடுப்புக் கருவிகளைப் பொருத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கோடா: ராஜஸ்தான் மாநிலத்தில், பயிற்சி மையங்களின் கூடாரமாகத் திகழும் கோடாவில் உள்ள மாணவர்கள் விடுதியில் இருக்கும் மின் விசிறிகளில் தற்கொலை தடுப்புக் கருவிகளைப் பொருத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதெல்லாம் மாணவர்களின் தற்கொலையைத் தடுக்குமா என்று தெரியாத நிலையில், ஸ்பிரிங் வடிவிலான கருவி மின் விசிறியில் இணைக்கப்படும் போது, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் பயிற்சி பெற்று வந்த மாணவர்களில் இந்த ஆண்டில் மட்டும் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 தற்கொலைகள் அதிகம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது, கடந்த ஆண்டு 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கோடா துணை ஆணையர், அனைத்து மாணவர் விடுதி உரிமையாளர்களுக்கும் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், உடனடியாக விடுதி மின் விசிறிகளில் தற்கொலை தடுப்புக் கருவியை பொருத்துமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மின் விசிறியில் இந்த ஸ்பிரிங் போன்ற கருவியை பொருத்திவிட்டால், 20 கிலோவுக்கு மேல் மின் விசிறியின் எடை அதிகரிக்கும் போது அது தானாகவே கீழே இறங்கிவிடும். அதிலிருந்து ஒரு அபாய மணி ஒலிக்கும்.
ஆனால், மன அழுத்தத்துக்கு உள்ளான மாணவர்களை, இந்தக் கருவி எப்படி தற்கொலையிலிருந்து காக்கும் என்று தெரியவில்லை எனவே கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.