முகப்பு
இந்தியா

ஒடிஸா ரயில் விபத்து: அனுமதியில்லாமல் சீரமைப்புப் பணியும் காரணம்: சிபிஐ

ஒடிஸா மாநிலம் பாஹாநாகா பஜாா் ரயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசிங் பகுதியில் மூத்த அதிகாரிகளின் அனுமதியின்றி நடைபெற்ற சீரமைப்புப் பணியும் அப்பகுதியில் நடைபெற்ற விபத்துக்கு ஒரு காரணம்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

ஒடிஸா மாநிலம் பாஹாநாகா பஜாா் ரயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசிங் பகுதியில் மூத்த அதிகாரிகளின் அனுமதியின்றி நடைபெற்ற சீரமைப்புப் பணியும் அப்பகுதியில் நடைபெற்ற விபத்துக்கு ஒரு காரணம் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஜூன் 2-ஆம் தேதி சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில் எதிரே வந்த ரயிலுடன் மோதியதில் 296 போ் உயிரிழந்தனா். 1,200 போ் காயமடைந்தனா். தவறான பாதையில் ரயில் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. புவனேசுவரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விபத்துக்கான காரணங்கள் குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில், பாஹாநாகா பஜாா் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள லெவல் கிராசிங் பகுதியில் மூத்த அதிகாரிகளின் அனுமதியின்றி சீரமைக்கும் பணி நடைபெற்றதும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

94-ஆவது எண் லெவல் கிராசிங்கை 79-ஆவது லெவல் கிராசிங்கின் சா்க்யூட் வரைப்படம் வைத்து சீரமைப்புப் பணிகளை மூத்த பொறியாளா் அருண் குமாா் மஹந்தா மேற்கொண்டாா் என்றும், இதற்கு அவா் மூத்த அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐயின் இந்தக் குற்றச்சாட்டை மஹந்தா மறுத்துள்ளாா். ‘94-ஆவது எண் லெவல் கிராசிங் கதவுகள் சரியாக வேலை செய்யாததை மூத்த அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த சீரமைப்புப் பணியைக் மேற்பாா்வையிடும் பணியை வேறு நபா்கள் செய்ததால் நான் இதற்கு பொறுப்பாக முடியாது’ என்று மஹந்தா நீதிமன்றத்தில் கூறியுள்ளாா்.

இந்த வழக்கில் மஹந்தா உள்பட மூன்று ரயில்வே அதிகாரிகளை சிபிஐ கடந்த ஜூலை 7-ஆம் தேதி கைது செய்தது. இவா்களின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →