முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது: மல்லிகார்ஜுன கார்கே

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:27 PM
பகிர்:

நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம் ஆண்டு தினமான புதன்கிழமை, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் இரு இளைஞா்கள் பாா்வையாளா் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். அவா்களை எம்.பி.க்கள் பிடித்து பாதுகாவலா்களிடம் ஒப்படைத்தனா். அதுபோல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் இருவா் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, அமோல் ஷிண்டே, சாகா், மனோரஞ்சன் ஆகிய நால்வரையும் போலீஸாா் உடனடியாக கைது செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனா். பின்னா், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான லலித் ஜா புது தில்லியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறாவது நபரான மகேஷ் குமாவத்தை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. 

பல மணி நேரம் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதற்கு பின், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரும், டிசம்பர் 13ஆம் தேதி தில்லி வந்துள்ளதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம் மிகவும் தீவிரமானது, இதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அவையில் விளக்கம் அளிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, ஆனால் அதே சமயம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதிலும் அர்த்தமில்லை.  இந்த பாஜக அரசு காங்கிரஸை குறை கூறுவதிலும், நேரு, காந்தி போன்ற தலைவர்களை அவமதித்து வாக்கு சேகரிப்பதிலும் தான் குறியாய் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →