சாதி அடக்குமுறை? மும்பை ஐஐடியில் மாணவர் தற்கொலை
மும்பை ஐஐடியின் 7வது மாடியிலிருந்து முதலாமாண்டு மாணவர், குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ஐஐடியின் 7வது மாடியிலிருந்து முதலாமாண்டு மாணவர், குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடியில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், சாதிய அடக்குமுறை காரணமாகவே மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவர்கள் காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது முதலாமாண்டு மாணவர் தற்கொலை செய்துள்ளார். ஐஐடி வளாகத்தின் 7வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாணவரின் விடுதி அறையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். எனினும் தற்கொலைக்கான எந்தவொரு தரவுகளும் கிடைக்கவில்லை.
ஐஐடியில் மூன்று மாதங்களுக்கு முன்பு மாணவர் சேர்ந்துள்ளார். கடந்த சனிக்கிழமை தேர்வுகள் முடிந்துள்ளன. தேர்வு அழுத்தம் தொடர்பாக மாணவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சக மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஐஐடியில் நிலவிய சாதிய அடக்குறையால், மனமுடைந்திருந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை ஐஐடி இயக்குநர் சுபாஷிஷ் செளத்ரி தெரிவித்துள்ளதாவது, 18 வயதேயான முதலாமாண்டு மாணவனின் இழப்பை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மாணவனின் மரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரின் குடும்பத்துக்கு வலிமை கிடைக்க வேண்டிக்கொள்கிறோம். மாணவரின் ஆன்மா சாந்தியடையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை ஐஐடியில் அடிக்கடி இதுபோன்ற வகுப்புவாத அடக்குமுறை மரணங்கள் நடப்பதாக அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் குற்றம்சாட்டியுள்ளது.