வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் உற்சாகமாக குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.
62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 31 வரை பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 5 நாள்களில் மட்டும் சுமார் 67 ஆயிரம் பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரையில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு-காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எப் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் சர்வதேச எல்லையிலிருந்து கட்டுப்பாடு கோடு வரையிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
அமர்நாத் யாத்திரையின்போது பயணிகள் கடைபிடிக்க வேண்டியவை!
- அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் முன் ஒவ்வொருவரும் ஆர்.எஃப்.ஐ.டி அட்டையை பெறுவது கட்டாயமாகும். ஜம்மு-ஸ்ரீநகருக்குள் நுழையும்போது இந்த அட்டை உங்கள் கையில் இருக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த அட்டை வழங்கப்படுகிறது. யாத்திரை முடியும் வரை இந்த அட்டை உங்கள் கையிலோ, கழுத்திலோ இருப்பது அவசியம்.
- யாத்திரைக்கு செல்பவர்கள் உங்கள் உடலுக்கு தகுந்தவாறு ஆடைகளை அணிவது அவசியம். அதேசமயம் பக்தர்கள் மலையேறுவதற்குப் பொருத்தமான காலனிகளும்(trekking shoes) அணிய வேண்டும்.
- மலையேறும் பயணிகள் வேகவேகமாக நடப்பதை தவிக்கலாம். மெதுவாக மலையேறினால் நீண்ட தூரம் களைப்பில்லாமல் பயணிக்க முடியும்.
- காஷ்மீரில் குளிர்ந்த காலநிலை நிலவுவதால், பயணிகள் போதுமானளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம். இல்லையெனில் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- பயணிகள் மலையேற்றத்தின்போது மூச்சு விடுவதற்கு அசௌகரியம் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவ முகாமிற்குச் சென்று தங்களைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
- தொடர்ந்து நடைப்பயணம் மேற்கொள்ளாமல் இடையில் சற்று ஓய்வெடுத்தப் பிறகு நடைப் பயணத்தைத் தொடங்கலாம்.
- சாப்பிடும் பொருள்கள், பாட்டீல்கள் என தேவையற்ற பொருள்களை அங்கேயே வீசி மாசு ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.
- அமர்நாத் பக்தர்கள் மலையேறும் போது புகைப்பிடித்தல் மற்றும் அல்கஹால் அருந்துவது கூடாது. வெறும் வயிற்றில் பயணிப்பது நல்லது.
- பக்தர்கள் மலையேறுவதற்கு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காமல், அனைவரும் பயணிக்கும் பாதையில் செல்ல வேண்டும்.
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றினால், எந்தவித சிரமமும் இன்றி பாதுகாப்பாக பயணிக்கலாம்.