மணிப்பூர் கொடூரம்: மக்களவையில் 12 மணிக்கு விவாதம்; மாநிலங்களவை ஒத்திவைப்பு
மக்களவையில் 12 மணிக்கு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தலாம் என அவைத்தலைவர் அறிவித்துள்ளார்.
புது தில்லி: மக்களவையில் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தலாம் என அவைத்தலைவர் அறிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மக்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டநிலையில், 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று அவைத் தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து, மக்களவையில் நடைபெறும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்துக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியிருக்கிறார்.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷமெழுப்பியதால், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.