மும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.6.2 கோடி மதிப்புள்ள சுமார் 10 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்ததாகவும், இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுதில்லி: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்புள்ள சுமார் 10 கிலோ கடத்தல் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பயணிகள் 3 பேர் தங்களது இடுப்பில் துணிகளுக்குள் மறைத்து கடத்தி வந்த 8 கிலோ எடைக் கொண்ட கடத்தல் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.4.94 கோடி என தெரிவித்தனர்.
துபாயிலிருந்து மும்பை வந்த மற்றொரு விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் பயணி ஒருவர் 2 கிலோ கடத்தல் தங்கம் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1.23 கோடி.
இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.