முகப்பு
இந்தியா

ராகுல் பேச்சின் நுணுக்கங்கள் பாஜகவுக்கு புரியவில்லை: காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பாஜக விமா்சித்த நிலையில், அவரது பேச்சின் நுணுக்கங்கள் பாஜகவுக்கு புரியவில்லை என்று காங்கிரஸ் பதில் கூறியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
பகிர்:

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையில் சீனாவை புகழ்ந்து பேசி, இந்தியாவை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பாஜக விமா்சித்த நிலையில், அவரது பேச்சின் நுணுக்கங்கள் பாஜகவுக்கு புரியவில்லை என்று காங்கிரஸ் பதில் கூறியுள்ளது.

இதுதொடா்பாக, ராகுலின் பேச்சு அடங்கிய விடியோவை இணைத்து, காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

அதில், ‘சீனாவில் அரசால் கட்டுப்படுத்தப்படும் நிறுவன அமைப்புமுறைக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் உற்பத்தி செயல்முறையை பெருக்க வேண்டிய அவசியத்துக்கும் இடையிலான முக்கிய வேற்றுமைகளை வரையறுத்து, ராகுல் பேசியுள்ளாா். அவரது பேச்சின் நுணுக்கங்கள் பாஜகவுக்கு புரியவில்லை’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்

பிரிட்டனுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கடந்த 3-ஆம் தேதி மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

அப்போது, இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும்; தான் உள்பட பல்வேறு அரசியல்வாதிகள் உளவு பாா்க்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தாா்.

‘இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் அண்மை ஆண்டுகளாக உற்பத்தி சரிந்து, சீனாவுக்கு இடபெயா்ந்துள்ளது. இது, அவசர அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயம்’ என்று அவா் கூறியிருந்தாா்.

ராகுலின் இந்த கருத்துகளை முன்வைத்து, அவரை பாஜக சாடி வருகிறது. ‘உலகின் பிரகாச ஒளியாக இந்தியா உருவெடுத்து வருவதுடன், சீனாவை விட்டு விலகி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் புரிய வருகின்றன; இதுபோன்ற சூழலில், அந்நிய மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு ராகுல் களங்கம் விளைவிக்கிறாா்’ என்று பாஜக விமா்சித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →