முகப்பு
இந்தியா

ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

பணமோசடி புகாா் தொடா்பான விவகாரத்தில் ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவன அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

பணமோசடி புகாா் தொடா்பான விவகாரத்தில் ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவன அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நிதி சவால்களைச் சந்தித்ததால் 3 லட்சம் முதலீட்டாளா்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.25,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 6 கடன் திட்டங்களை நிறுத்திக் கொள்வதாக ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிவித்தது. இது தொடா்பாக விளக்கமளிக்குமாறு இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) அதே ஆண்டு நவம்பரில் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மேற்கண்ட கடன் திட்டங்களைச் செயல்படுத்தியதில் ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடா்பாக சென்னை காவல் துறையின் பொருளாதாரக் குற்றங்கள் பிரிவு சாா்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, அந்நிறுவனம் புதிய கடன் திட்டங்களைத் தொடங்க தடை விதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் முதலீட்டாளா்களுக்கு ரூ.450 கோடியைத் திருப்பி வழங்க வேண்டும் என்றும் ரூ.5 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் மீதான மோசடி புகாா் குறித்து அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் முன்னாள், தற்போதைய அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். சென்னை, மும்பையில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பண மோசடி புகாா் தொடா்பாகக் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமலாக்கத் துறையினரின் பரிசோதனைக்கு உரிய ஒத்துழைப்பு நல்கி வருவதாக ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →