புதுதில்லி: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தனது பங்குகளை பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், நிறுவன சந்தை மூலதனத்தின் வீழ்ச்சி குறித்து மோடி அரசை காங்கிரஸ் இன்று விமர்சித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி கடந்த ஆண்டு இதே நாளில் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் தனது பங்குகளை பட்டியலிட்டது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில் சந்தை மூலதனத்தின் சரிவை அதானி நிறுவனங்களில் முதலீடு செய்வதோடு இணைக்க முயன்றார். இது பாஜகவினரால் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரைகுறை தகவல் மூலம் மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார்.
ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, எல்.ஐ.சி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது அதன் சந்தை மூலதனம் ரூ.5.48 லட்சம் கோடியாக இருந்தது. இன்று 35 சதவீதம் சரிந்து ரூ.3.59 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்றார்.
இந்த செயல்பாட்டில் லட்சக்கணக்கான பாலிசிதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், பட்டியலிடப்பட்டதிலிருந்து எல்.ஐ.சி பங்கு ரூ.1.9 லட்சம் கோடியை இழந்துவிட்டதாக கூறும் ஊடக அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டை டேக் செய்துள்ளார்.
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.யின் வெளிப்பாடு 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மால்வியா கூறியதன் மூலம் ஜெய்ராம் ரமேஷுக்கு தக்க பதிலடி பாஜகவினரால் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனமானது அதானி குழுமத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்துள்ளது.