'கூகுள் பே' பயனர்களுக்கு கூகுளின் முக்கிய எச்சரிக்கை!
கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும்போது, திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூகுள் அறிவுறுத்தியுள்ளது.
கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும்போது, திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
உலகில் மிக பிரபலமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனை(யுபிஐ) செயலிகளில் ஒன்று கூகுள் பே. இந்நிலையில் கூகுள் பே பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூகுள் பே செயலியில், சந்தேகத்திற்கிடமான பணபரிவர்த்தனைகளைக் கண்டறிய கூகுளின் சிறந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் பாதுகாப்புடன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
Advertisement
இந்நிலையில் கூகுள் பே செயலியில் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனைகளுக்கு, சில செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்!
மொபைல் போன், கணினி, லேப்டாப் என எந்த சாதனத்திலும் கூகுள் பே செயலில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, திரை பகிர்வு செயலிகள்(screen sharing apps) அனைத்தையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது. இது உங்கள் சாதனத்தின் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும். உங்களின் டெபிட் கார்டு, வங்கிக் கணக்கு தகவல்களை எடுத்துக்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும்போது, ஸ்க்ரீன் ஷேர்(Screen Share), எனி டெஸ்க்(AnyDesk), டீம் வியூவர்(TeamViewer) உள்ளிட்ட திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த செயலிகள் பயன்பாட்டில் இல்லாததை உறுதி செய்துகொள்ளுமாறும் கூறியுள்ளது.
மேலும் இதுபோன்று திரை பகிர்வு செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறோ பயன்படுத்துமாறோ கூகுள் செயலிகளில் எச்சரிக்கை அறிவிப்பு வராது என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | நிகழ்த்தப்படாத கென்னடியின் கடைசி உரை!