ராகுல் காந்தி ஒரு போராளி, தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு அவர் நேர்மையாக பதில் அளிப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடியை ‘அதிருஷ்டமில்லாதவா்’, ‘கொள்ளையடிப்பவா்’, ‘பெரும் தொழிலதிபா்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்பவா்’ எனத் தோ்தல் பிரசாரத்தின்போது பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்குத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை (நவ.23) நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு சனிக்கிழமை (நவ.25) மாலைக்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக ஆளும் பாஜகவினரும் எதிராக எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, காங்கிரஸ் தலைவர் 'ராகுல் காந்தி ஒரு போராளி, வலிமையான நேர்மையான தலைவர். பிரதமர் மீதான கருத்துகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு அவர் கண்ணியமாகவும் நேர்மையாகவும் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன். அவர் நேர்மையானவர் என்பதால் அவரால் எந்த அச்சமும் இன்றி இருக்க முடியும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'ராகுல் காந்தியின் குடும்பத்தைப் பற்றி பாஜக பேசியதற்கு எங்களிடம் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அப்படி இருக்க, இப்போது ராகுல் பேசும்போது, அவர்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் நேருவைப் பற்றிக்கூட மிகவும் அவதூறாகப் பேசியிருக்கிறார்கள்' என்று கூறினார்.