பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்: ஆப்கன் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலியானதாக ஆப்கன் குற்றச்சாட்டு வைத்துள்ளது பற்றி...
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட பொதுமக்கள் 4 பேர் பலியானதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நீடித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போா் தொடுப்பதாக பாகிஸ்தான் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவம் காபூல் மற்றும் காந்தகரில் நள்ளிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட பொதுமக்கள் 4 பேர் பலியானதாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆப்கன் அரசின் செய்தித் தொடர்பாளர் சபீபுல்லா முஜாஹித் கூறுகையில், ”காந்தகர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள காம் ஏர் தனியார் விமான நிலையத்திற்குச் சொந்தமான எரிபொருள் கிடங்குகள் மீது பாகிஸ்தன வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் அரசு மற்றும் ஐக்கிய நாடுகளின் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கிவந்தது.
மேலும், பாகிஸ்தான் பொதுமக்கள் வாழும் பகுதிகளான பாக்தியா, பாக்திகா போன்ற பல இடங்களில் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு தகுந்த பதிலளிக்காமல் விடமாட்டோம்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் மொத்த பலி எண்ணிக்கை விவரங்கள் வெளியாகவில்லை.
இரு நாடுகளும் சில வாரங்களுக்கு முன்பிருந்து ஒருவருக்கொருவர் ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தாலிபன்களையும் எல்லையில் உள்ள அவர்களது ஆதரவு நிலைகளையும் மட்டுமே தாங்கள் தாக்குவதாக பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்தப் போரில் இரு நாடுகளுக்கும் பெரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்டத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.