விரைவு ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் பாஜக முன்னாள் தலைவர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ளார். அவர் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் விடியோ வெளியாகியுள்ளது.
தில்லியிலுள்ள ராஜேந்திர நகர் முனையத்திலிருந்து, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் சந்திப்பு வரை செல்லும் ரயில், ஸியாரத் விரைவு ரயில்.
பிகார் மாநிலம் பக்ஸார் மாவட்ட பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராணா பிரதாப் சிங், தனது நண்பருடன் ஸியாரத் விரைவு ரயிலின் முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ளார்.
ரயில் டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட் கேட்டபோது, அவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். என்னைத் திருடன் என்கிறாயா? என்னை எப்படி நீ திருடன் எனக் கூறலாம்? என டிக்கெட் பரிசோதகரிடம் பிரதாப் சிங் கேள்வி எழுப்புகிறார். நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்கிறேன் என டிக்கெட் பரிசோதகர் அவருக்கு பதிலளிக்கிறார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.