ஓய்வுபெற்றாலும் மன்மோகன் என்றுமே கதாநாயகன்தான்: காங்கிரஸ்
மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஓய்வுபெறுகிறார். அவரது 33 ஆண்டு கால பதவி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் ஓய்வுபெறுவதன் மூலம், ஒரு சகாப்தம் நிறைவு பெற்றுள்ளது. அவர் ஓய்வுபெற்றாலும், நடுத்தர மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எப்போதுமே கதாநாயகனாகவே திகழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள், தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றாலும்கூட, நாட்டுக்காகவும், நாட்டின் மக்களுக்காகவும் ஒலிக்கும் குரலாகவே நீங்கள் எப்போதும் நீடிப்பீர்கள், உங்களுக்கு அமைதியும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று கார்கே பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த நாடு குறிப்பாக, கிராம மக்கள், தங்களது வாழ்வுக்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் மூலம், மரியாதைக்குரிய வாழ்வை மேற்கொண்டதற்காக உங்களை எப்போதும் நினைவுகூர்வார்கள்.
பிரதமர் அலுவலகத்துக்கு மன்மோகன் சிங் ஏற்படுத்திய அமைதியான, வலுவான கண்ணியத்தை தற்போது தேசம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படி நிலவையும் சூரியனையும் மறைக்க முடியாதோ, அப்படித்தான் உண்மையையும் எப்போதும் மறைக்க முடியாது. நாட்டு மக்கள் விரைவில் உங்களின் வார்த்தைக்கான முக்கியத்துவத்தை அறிந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.