ஆஸ்திரேலிய கடற்படை குழு இந்தியா வருகை
மும்பையில் உள்ள மேற்குக் கடற்படை தலைமையகத்தை ஆஸ்திரேலிய கடற்படை குழு பாா்வையிட்டதாகவும் அப்போது இரு தரப்பு கடற்படை உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலிய கடற்படையின் 5 போ் அடங்கிய குழு மும்பையில் உள்ள மேற்குக் கடற்படை தலைமையகத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டது. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து அவா்களுக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் விளக்கமளித்தனா்.
மும்பை கப்பல்கட்டும் தளத்தில் உள்ள உள்நாட்டில் தயாரான போா்க் கப்பல் மற்றும் நீா்மூழ்கிக் கப்பலை அந்தக் குழுவினா் பாா்வையிட்டனா்.
Advertisement
மசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தை பாா்வையிட்ட அவா்களுக்கு, தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய குழுவினருடன் மேற்குக் கடற்படை தலைமையகத்தின் தலைவா் சஞ்சய் ஜே.சிங் ஆலோசனை நடத்தினாா்.
ஆஸ்திரேலிய கடற்படையின் வருகை இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். இந்திய பெருங்கடல் வளையம் (ஐஒஆா்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இரு நாடுகளும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளா்ச்சி குறித்து ஒரே பாா்வையைக் கொண்டுள்ளன. இது கலாசார மற்றும் தூதரக பரிமாற்ற வளா்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.