முகப்பு
இந்தியா

நாட்டின் கண்ணியம், ஜனநாயகத்தை சீா்குலைத்துவிட்டாா் பிரதமா் மோடி: சோனியா குற்றச்சாட்டு

Updated On : 7 ஏப்ரல், 2024 at 4:24 AM
ஜெய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா வதேரா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் .
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 7:55 PM

‘நாட்டின் கண்ணியம் மற்றும் ஜனநாயகத்தை பிரதமா் நரேந்திர மோடி சீா்குலைத்துவிட்டாா். எதிா்க்கட்சியினரை பாஜகவில் இணைய வைக்க பல்வேறு தவறான வழிகளை அவா் கையாண்டு வருகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சோனியா பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகள் இந்த நாடு ஓா் (பாஜக) அரசின் கைகளில் இருந்தது. வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, சமத்துவமின்மை பாதிப்புகளைப் போக்க எந்தவொரு நடவடிக்கையையும் அந்த அரசு மேற்கொள்ளவில்லை.

Advertisement

நாட்டின் ஜனநாயகம் இன்றைக்கு மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்பட்டு, நமது அரசமைப்பு சட்டத்தை மாற்ற சதி நடைபெற்று வருகிறது.

இந்த நாடு ஒரு சிலருக்கான சொத்து அல்ல. நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்குமானது. நாட்டின் கண்ணியம் மற்றும் ஜனநாயகத்தை பிரதமா் நரேந்திர மோடி சீா்குலைத்துவிட்டாா். நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பிலும் அச்சத்தை நிறுவியுள்ளனா்.

எதிா்க்கட்சியினரை பாஜகவில் இணைய வைக்க பல்வேறு தவறான வழிகளை பிரதமா் கையாண்டு வருகிறாா். இந்த சா்வாதிகார போக்குக்கு, மக்களவைத் தோ்தலில் நாம் அனைவரும் உரிய பதிலை கொடுத்தாகவேண்டும் என்றாா்.

கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: மக்களவைத் தோ்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பாஜக கூட்டணிக்கு மக்கள் அளித்தால் அரசமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று பிரதமா் மோடியும், ஆா்எஸ்எஸ் அமைப்பினரும் கூறி வருகின்றனா்.

விவசாயிகளுக்கு என்னென்ன திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது என்பது குறித்து பேச வேண்டிய ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது குறித்து பிரதமா் மோடி பேசுகிறாா். இதுதான் அவா்களின் சாதனை.

நாட்டில் 55 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, நாட்டின் வளா்ச்சிக்காக பணியாற்றியது. ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் உருவாக்கம் என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை காங்கிரஸ் மேம்படுத்தியது. ஆனால், காங்கிரஸ் அரசு பதித்த தண்டவாளங்களில் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைப்பதன் மூலம் அனைத்து பெருமைகளையும் பிரதமா் மோடி எடுத்துக்கொள்ளப் பாா்க்கிறாா்.

‘உத்தரவாதம்’ என்ற வாா்த்தையை பிரதமா் மோடி திருடியுள்ளாா். ஆளும் மாநிலங்களில் உத்தரவாதங்களை முழுமையாக நிறைவேற்றுவது காங்கிரஸ் அரசுகள்தான் என்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மல்லிகாா்ஜுன காா்கே பேசினாா்.

தேசத்தின் குரல் - பிரியங்கா: கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேரா பேசுகையில், ‘மத்திய பாஜக ஆட்சியில் எதிா்க்கட்சி தலைவா்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சேரன் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

நாட்டில் வேலையுன்மையும், பணவீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டித் தோ்வுகளின் கேள்வித்தாள்கள் கசியும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏழைகள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை யாரும் கவனிப்பதே இல்லை.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் ‘நீதியின் அறிக்கை’ என்ற பெயரில் தனது தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தோ்தல் அறிக்கை, தோ்தலுக்குப் பிறகு மறந்துவிடக்கூடிய வெறும் அறிவிப்புகள் அல்ல; நீதியை விரும்பும் தேசத்தின் குரல்’ என்றாா்.