முகப்பு
இந்தியா

ராணுவமே அக்னிபத் திட்டத்தை எதிர்க்கிறது: ராகுல் காந்தி

பழங்குடி மக்களுக்காக அரசு ரூ.10 செலவிட்டால், அதிகாரிகள் 10 காசுகளை மட்டுமே கொடுக்கிறது.

Updated On : 8 ஏப்ரல், 2024 at 8:08 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த அக்னிபத் திட்டத்துக்கு ராணுவ வீரர்களே எதிர்ப்பு தெரிவிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசிய ராகுல் காந்தி, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் முன்பு ராணுவத்தில் சேர்ந்தனர். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்துவந்தது. தற்போது 4 மாதங்களுக்கு மட்டுமே அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், சீனாவில் 5 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக் குறைபாடால் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியும். அக்னிபத் திட்டத்தில் வந்தவர், இறந்தால், அவரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் கூட கிடைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அக்னிபத் திட்டத்தை நீக்குவோம். ராணுவ வீரர்களும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராகவுள்ளனர். இந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் அலுவலக யோசனையில் உதித்தது.

பழங்குடி மக்களுக்காக அரசு ரூ.10 செலவிட்டால், அதிகாரிகள் 10 காசுகளை மட்டுமே பழங்குடி மக்களுகளுக்கு கொடுக்கிறது. இது மாற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது உண்மையான பலன் யாருக்குச் சென்றடைய வேண்டும் என்பதை வெளிப்படுத்திவிடும்.

Advertisement

மத்திய அரசுத் துறைகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால், தகுதியானவர்களுக்கு அதனை தர பாஜக மறுக்கிறது. ஒப்பந்த முறைப்படி ஊழியர்கள் நிரப்பப்படுகிறார்கள். பாஜக ஒருபோதும் அரசு வேலையைத் தராது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் முதலில் இந்த 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.