மக்களவைக் கூட்டத்தில் பேசிய ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே துறைமீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.
புது தில்லியில் இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய ரயில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``58 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் ஒரு கிலோமீட்டர் தூரம்கூட தானியங்கி ரயில் பாதுகாப்பு நிறுவ முடியவில்லை? ஆனால், இன்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ரயில் ஓட்டுநர்களுடன் ரீல்களை தயாரிப்பதில் பிஸியாக இருப்பவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது, வருடாந்திர சராசரி விபத்துக்களின் எண்ணிக்கை 171ஆக இருந்தது; இது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 10 ஆண்டுகளில் 68% குறைந்துள்ளது.
மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது, விபத்துக்களின் எண்ணிக்கை 0.24% லிருந்து 0.19%ஆகக் குறைந்தது; இன்று 0.19%லிருந்து 0.03%ஆகக் குறைந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சரை `ரீல் அமைச்சர்’ என்று ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சி எம்.பி. ஹனுமான் பெனிவால் கூறியதையடுத்து கோபமுற்ற மத்திய அமைச்சர், ``வாயை மூடுங்கள்’’ என்று ஹனுமான் பெனிவாலை பதிலளித்தார்.
அண்மைக் காலங்களில் ரயில் தொடர்பான விபத்துகள் அதிகளவில் நடப்பதாகக் கூறி, பாஜக அரசின்மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.