ஓட்டுநர் இறங்கிய 2 நிமிடங்களில் காணாமல் போன கார்!
மும்பையில் பலத்த காற்று வீசியதில் விளம்பரப் பலகை சரிந்து விபத்து
மும்பையில் விளம்பரப் பலகை விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.
மும்பையின் பல பகுதிகளில் அண்மைக் காலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கல்யாண் நகரில் உள்ள சஹாஜனந்த் சௌக் பகுதியில் இன்று (ஆக. 1) காலை 10.30 மணியளவில் பலத்த காற்று வீசியதால், அப்பகுதியில் இருந்த பெரிய அளவிலான விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் ஓரம் அமைக்கப்பட்ட விளம்பரப் பலகை விழுந்ததில், கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார்களும் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தின்போது, காரில் இருந்து கீழிறங்கிய இரண்டு நிமிடங்களில், காரின்மீது பலகை விழுந்ததாக, சேதமடைந்த கார் உரிமையாளர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த காவல்துறையும், தீயணைப்புப் படையும் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்றடைந்தது.
இதனையடுத்து, போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டதுடன், விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.