தாஜ்மஹாலின் உள்ளே தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முகலாயப் பேரரசர் ஷாஜகானால் தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன்பு, அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாஜ்மஹாலினுள்ளே நீரை எடுத்துச் சென்று, இந்துக் கடவுளை வழிபட்டு, நீரபிஷேகம் செய்ததாகக் கூறி, ஆக. 3, சனிக்கிழமையில் அகில பாரத இந்து மகாசபையின் இரண்டு உறுப்பினர்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிவனுக்கு உகந்த நாளான, சாவான் மாதத்தின் மூன்றாம் திங்கள்கிழமையான ஆக. 5ஆம் தேதியில், இந்து மகாசபையின் மகளிர் பிரிவின் மாவட்டத் தலைவர் மீரா ரத்தோரும் தாஜ்மகாலுக்கு சென்று, நீரபிஷேகம் செய்ததுடன், தாஜ்மகாலினுள்ளேயே காவிநிறக் கொடியையும் ஏற்றியுள்ளார்.
இதனையடுத்து, மீராவையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். தாஜ்மகாலினுள்ளே நீரபிஷேகம் செய்த மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தாஜ்மஹாலின் சமேலி ஃபர்ஷ் பகுதியிலிருந்து பிரதான குவிமாடம் பகுதி வரையில் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக, இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆக. 6, செவ்வாய்க்கிழமையில் அறிவித்தது.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுற்றுலா வழிகாட்டிகள் நலச் சங்கத்தின் தலைவர் தீபக் டான், "வெப்பமான காலநிலைகளில் சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் இல்லாமல் தாஜ்மகாலில் இருக்க முடியாது. தண்ணீர் பாட்டில்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, அதிகாரிகள் விழிப்புடன் இருந்தால் நல்லது.
இந்த நடவடிக்கையை எங்கள் சங்கம் எதிர்க்கிறது. தண்ணீர் இல்லாமல், பார்வையாளர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த முடிவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மோசமான பிம்பத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
இருப்பினும், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ்குமார் படேல், ``பார்வையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள மாட்டார்கள்’’ என்று உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.