வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கடன் தள்ளுபடி!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைப்பான கேரள வங்கி அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கேரள வங்கி நிர்வாகம் சார்பில் கூறுகையில், வயநாடு மாவட்டம் சூரல்மலைப்பகுதியில் உள்ள கேரள வங்கி கிளையில் 1000-க்கும் மேற்பட்டோர் கடன் பெற்று இருந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
Advertisement
சிலர் குடும்பங்களை இழந்தும், வசித்து வந்த வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் வாங்கிய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.
கேரள வங்கி ஏற்கனவே முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளது.
இதுதவிர, கேரள வங்கி ஊழியர்கள் தாமாக முன்வந்து தங்களின் 5 நாள் சம்பளத்தை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.